Tuesday, 14 October 2008

*** ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறினால் 40 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் - அனைத்து கட்சி கூட்டத்தில் எச்சரிக்கை!



ஈழத் தமிழர்களை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால், தமிழ்நாடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முற்று முழுதாக பதவி விலகுவார்கள் என தமிழ்நாடு அரசாங்கம் மத்திய அரசிடம் எச்சரிக்கை விடுத்து தீர்மானம் விடுக்கப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் அரச செயலகத்தில் தமிழக முதல்வர் கருனாநிதி தலைமையில் இடம்பெற்ற இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆறு தீர்மானங்களும் வருமாறு...

தீர்மானம்: 1
இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க்கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் தாக்குதலையும் கண்டு எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சகவாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டும்.

தீர்மானம்: 2
இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள், இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே, இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும்.

தீர்மானம்: 3
இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் இரண்டு வாரக்காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும்.

தீர்மானம்: 4
போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன்வரவேண்டுமென்று இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 5
மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 6
வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக்கொல்வதுமான கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகவும் கண்டிப்பதோடு மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டும்.

என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளளன.தி.மு.க, காங்கிரஸ், பா. ம. க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட்), அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திராவிடர் கழகம், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் முஸ்லீம் லீக், புதிய தமிழகம், எம்.ஜி. ஆர். கழகம், ஜனநாயக முன்னேற்ற கழகம், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தை, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
pathivu.com
*****

No comments: