சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாநிதி மாறன் முடிவு செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க தமக்கு நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்.மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அழகிரியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க திமுக பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் அதற்குள்ளாகவே தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை தாமே முன்வந்து ராஜினாமா செய்தார்.
ஆனாலும் திமுக எம்பியாகவே இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாநிதி.இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இரு வார காலத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை தொடர்ந்து திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பனர்களும் மத்திய அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை கருணாநிதியிடம் அளித்தனர்.இந்த நிலையில், தயாநிதி மாறன் பதவி விலகும் கடிதத்தை கருணாநிதியிடம் நேரில் ஒப்படைக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தங்கள் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழரின் வாழ்வுரிமை காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை இரு வார காலத்திற்குள் எடுக்காவிட்டால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்று எடுத்த முடிவினை ஏடுகள் வாயிலாக அறிந்தேன்.இலங்கை வாழ் தமிழர்கள் இன்னல்களை களைய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கேற்ப நானும், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் ஒப்படைத்தது போல் தங்களிடம் நேரடியாக ஒப்படைக்க விரும்புகிறேன்.அதற்காக தாங்கள் எனக்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் சமர்பிக்கிறார் தயாநிதி மாறன்.
*****








No comments:
Post a Comment