தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் - வாரமிருமுறை ஏட்டுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:
மேடம் (ஜெயலலிதா) விருப்பு - வெறுப்பு இல்லாமல் இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து யோசித்திருப்பார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் ஈவு-இரக்கமற்ற கொடூரங்களைப் பற்றிய விவரங்களை திரட்டியிருப்பார். ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகங்கள் குறித்த தகவல்களை முழுமையாக சேகரித்திருப்பார். அதில் தெளிவு பெற்ற பின்னர் தான் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
சிங்கள இராணுவத்தை எதிர்க்க ஈழத் தமிழர்களுக்குக் தளம் அமைத்துக் கொடுத்தது எம்.ஜி.ஆர்தான். அவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்திக் கொண்டுதான் ஒவ்வொரு ஈழத் தமிழனும் இந்த நிமிடம் வரையில் போர்க்களத்தில் நிற்கிறான். புரட்சித் தலைவரின் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இன்றைக்கு அவருடைய வழியிலேயே ஈழத் தமிழனைப் பாதுகாக்க முன்வந்திருக்கிறார்.
இதற்கு முன்பு 2006 ஆம் வருடம் ஈழப் பிரச்சினைக்காக டெல்லியில் எங்கள் கட்சி உண்ணாவிரதம் இருந்தபோது, அ.தி.மு.க-வின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி ஆதரவு கொடுத்தார் ஜெயலலிதா.
2007 ஆம் வருடம் சிறிலங்கா துணைத் தூதரகம் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கைதானோம். அப்போதும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அப்போதே இலங்கைக்கு இராணுவ உதவி செய்யக்கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இப்போது வந்திருக்கும் அவருடைய அறிக்கை தமிழக முதல்வர் பதவியில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தமிழர் நலனையே விட்டுத் தரத் தயாராக இருக்கும் கலைஞரின் உண்மையான கலரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது! ஜெயலலிதாவின் அறிக்கைக்குப் பிறகுதான் ஈழத் தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்தவராக பிரதமருக்குத் தந்திகள் அனுப்பச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஈழத் தமிழனுக்கு மயிலை மாங்கொல்லையில் இவர் பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவாராம்... அதைக் கேட்டு இலங்கை அரசாங்கம் தன் அட்டூழியத்தை உடனே நிறுத்திவிடுமாம். யாரை ஏமாற்றும் வேலை இது?
கலைஞர் நினைத்தால், அவர் வீட்டுக் கொல்லையில் டெல்லி மந்திரி பிரதானிகள் அத்தனை பேரும் வந்து நிற்பார்களே..! இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவின் உதவியை உடனே நிறுத்தவேண்டும் என்று அவர்களிடம் இவர் கட்டளை போடலாமே. அதைவிட்டுவிட்டு மாங்கொல்லையில் கூட்டம் கூட்டுவானேன்?
நூறு இலங்கை இராணுவத்தினருக்கு ஹரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர்ப் பயிற்சிகள் அளித்ததாக வந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.
இதுபோல் ஏராளமான ஆதாரங்களை எடுத்து வைக்க முடியும். செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் நாள் சிங்கள இராணுவ கேந்திரத்தின் மீது புலிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்கள். கரும்புலிகள் பிரிவு இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய மறுநாள், தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து ஒரு செய்தி வெளியாகிறது. அதில் இந்திய அதிகாரிகளான ஏ.கே.தாகூர் மற்றும் ரவுட் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உள்நாட்டுப் போர் நடக்கும் இடத்தில் இந்திய அதிகாரிகளுக்கு என்ன வேலை? இதற்கும் மறுநாள் இலங்கை செய்தி நிறுவனம் ஒன்று, மற்றொரு செய்தியை வெளியிடுகிறது. அதில் "265 இந்திய இராணுவ வல்லுநர்கள் இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பெயர் சொல்ல விரும்பாத இந்திய செய்தி தொடர்பாளர் ஒருவர் சொன்னதாக அதே செய்திக்குறிப்பு சொல்கிறது. இந்த இரண்டு செய்திகளையும் இந்த நிமிடம் வரை இந்திய அரசு மறுக்கவில்லையே.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு மூத்த செய்தியாளர் என்னிடம் பேசினார். இராணுவ அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா, "இந்திய சர்க்கார் நம் பக்கம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் "தமிழ்... தமிழ்" என்று முழங்கும் சில கைக்கூலிகள்தான் நம்மை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சு எடுபடாது. இந்தியாவின் துணையோடு நம் இலக்கை அடைந்துவிடுவோம்" என்று பேசியதாக அந்த செய்தியாளர் சொன்னார்.
இந்திய அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் கொழும்புக்குச் சென்று திரும்புகிறார்கள். இலங்கைக்கு இரண்டு சதவிகித வட்டியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது இந்தியா! இந்தக் கடன் தொகையைக்கொண்டு பொன்சேகா பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்கும் முயற்சிகளில் இருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. தமிழனை அழிக்க தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் பங்கு வகிக்கும் இந்திய அரசு பணம் கொடுக்கிறது!
அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் தான் இலங்கை விவகாரத்தில் இந்திய அரசைக் குழப்புகிறார்கள். முதலில் இப்படி குழப்பப்பட்டவர் ராஜீவ் காந்தி! போஃபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கிய சமயத்தில் அதை மறைக்க எதையாவது செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ராஜீவ். அந்த நேரத்தில் அவரை தன்னுடைய தந்திர வலையில் சிக்க வைத்து இலங்கை-இந்திய ஒப்பந்தம் போட்டார் ஜெயவர்த்தன. அந்தத் தவறை நியாயப்படுத்த, இப்போதும் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசிகளாகவும் தமிழர்களுக்கு வில்லன்களாகவும் இந்திய அதிகாரிகளில் ஒரு கூட்டமே செயற்படுகிறது.
அப்போது போட்ட ஒப்பந்த சரத்துக்களை மீண்டும் ஒப்பந்த வடிவில் கொண்டுவர இந்தியா முயன்றபோது நான் எதிர்த்தேன். உடனே, அது கைவிடப்பட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால், ஒப்பந்தம் போடாமலேயே சரத்துக்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த துணிச்சலில் "பிரபாகரன் பிடிபடுவார், ரொம்ப நாள் அவர் உயிரோடு இருக்க முடியாது" என்று இலங்கையின் இராணுவ தளபதி பொன்சேகா சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது. அவருடைய போர்த்தந்திரங்களை எதிர்கொள்ள எத்தனை நாட்டு இராணுவம் இலங்கைக்குத் துணையாக நின்றாலும் ஜெயிக்க முடியாது! என்று அதில் வைகோ கூறியுள்ளார்.
puthinam.com
*****
for contact: jaalavan@gmail.com









No comments:
Post a Comment