Friday, 31 October 2008

** ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று முழு கதவடைப்பு!

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை முழு கதவடைப்பு நடத்தப்பட்டுள்ளது.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அழைப்பு விடுத்திருந்த இந்த கதவடைப்பு போராட்டம் பெருவெற்றி கண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்றைய இந்த போராட்டத்தினால் சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
-
பலசரக்கு கடைகள், தேநீர் கடைகள், காய்கறி கடைகள், புடவைக் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.
சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
பெரம்பூர், வியாசர் பாடி, மயிலாப்பூர், அடையார், கோடம்பாக்கம், திருவொற்றியூர், திருவான்மியூர் உட்பட நகரின் பல பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகள், காய்கறிகள் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சிலர் காலை வியாபாரத்தை முடித்த பின்னர் கடைகளை அடைத்து விட்டனர்.


சென்னையில் மிகப் பெரிய காய்கறிச் சந்தையான கோயம்பேட்டில் நள்ளிரவு 12:00 மணி முதல் காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டன. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக சரக்குகள் ஏற்றி வரக்கூடிய சுமையூர்திகள் இன்று நிறுத்தப்பட்டன. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இன்று கொண்டு வரப்படவில்லை.இதனால் காய்கறி-பழ வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
-
பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வாங்க பல்வேறு வாகனங்களில் கோயம்பேடுக்கு வழக்கமாக வரும் சுமார் 1,000 வாகனங்களும் வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறி மொத்த-சில்லறை வியாபார கடைகள் மூடுப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு காய்கறி சந்தையின் பிரதான கதவு மூடப்பட்டு இருந்தது. பூக்கடை தவிர தங்ககங்கள், தேநீர் கடைகள், பல்பொருள் கடைகள் போன்றவை மூடப்பட்டன.



இதே போல தாம்பரம், ஆவடி, ஆம்பத்தூர், திருநின்றவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் செயற்படும் காய்கறி சந்தை வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெரு வீதிகளில் திறந்திருந்த ஒரு சில சிறிய கடைகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நகரில் உள்ள சில கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
puthinam.com
*****

No comments: