Saturday, 29 November 2008

** கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது வான்தாக்குதல்: சிறுவன் உட்பட மூவர் பலி; 18 பேர் காயம்!

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 1:35 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.




படுகாயமடைந்தவர்களில் பத்து வயதுக்கு உட்பட்ட ஏழு சிறார்களும் ஏழு பெண்களும் அடங்குவர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதர்சன் சிவகுமார் (வயது 05), முதியவரான இராமன் இராமசாமி (வயது 80) ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்னர். சம்பவ இடத்தில் கொல்லப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


தாக்குதலுக்கு உள்ளாகிய இந்த இடம்பெயர்ந்தோர் முகாம், அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் "பதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
போரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவதற்காக, இந்தப் பிரதேசத்தில் போய் தங்கியிருக்குமாறு அண்மையில் வன்னி வாழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
_____________

No comments: