Saturday, 22 November 2008

** சிறிலங்கா அரசின் மனித அவலத்தை அம்பலப்படுத்தி வன்னியில் கண்டனப் பேரணிகள்!

வன்னிக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணிகள் இன்று வன்னியில் நடைபெற்றன.தருமபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இப்பேரணிகள் இடம்பெற்றன.பேரணிகளில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு தமது கண்டனக்குரல்களை எழுப்பினர்.
பேரணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தொடங்கின.
இதில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டன.கிளிநொச்சி தருமபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டன முழக்கங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு தருமபுரம் பாடசாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.


கிளிநொச்சி அரச அதிபர் செயலகம் வரை அவர்கள் பேரணியாகச் சென்றனர். அங்கு கண்டனக்கூட்டம் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பினர் தலைவர் நா.அரசரத்தினம் தலைமையில் நடைபெற்றது.கண்டன உரைகளை அமைப்பின் உறுப்பினர்களான சி.துரைசிங்கம், க.மகாதேவன், அ.வேளமாலிகிதன், கி.வேதவனம் ஆகியோர் நிகழ்த்தினர்.
வன்னியில் சிறிலங்கா படையினரின் ஒடுக்குமுறையால் மக்கள் படும் அவலம் தொடர்பிலான மனு கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.


இதேவேளை, ஒட்டுசுட்டானில் உள்ள சந்தியில் தொடங்கிய கண்டனப் பேரணி உதவி அரச அதிபர் செயலகத்தில் முடிவடைந்தது.
வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பின் துணைத்தலைவர் சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கண்டன உரையை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் பொது அமைப்புகளின் ஒன்றியச் செயலர் நாகேந்திரராசா, மருதோடை பாடசாலை முதல்வர் நாகராசா ஆகியோர் நிகழ்த்தினர்.

இதிலும் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
__________
Puthinam.com

No comments: