Sunday, 16 November 2008

** சுவிஸ் பேர்ண் மாநகரில் நடைபெற்ற "உண்மைக்காய் எழுவோம்" - 7000 மேற்பட்ட மக்கள் அணிதிரண்டனர்

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்மைக்காய் எழுவோம் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 15.11.2008 சனிக்கிழமை பேர்ண் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு ஆரம்பாகவிருந்த இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்காக சுவிசின் பல பகுதிகளிலிருந்தும் சிலமணி நேரத்துக்கு முன்பே தமிழ்மக்கள் பாராளுமன்றத் திடலை நோக்கி வரத்தொடங்கியிருந்தனர்.
மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வின் முதல் நிகழ்வாக விழாச்சுடரினை பாராளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் Haula Pinto ஏற்றி வைத்தார்.

இளையோர் அமைப்பினரின் குறுகிய கால அழைப்பை ஏற்று அணிதிரண்ட மக்கள; தாயகத்தில் அகதிகளாக எம்முறவுகள் தங்குவதற்கு இடமின்றி படுகின்ற அவலங்கள் குறித்த படங்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தினரால் தமிழ் மக்களை இலக்கு வைத்து வீசப்படும் வான்குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்களால் மக்கள் இடம்பெயர்கின்ற காட்சிப்படங்களைத் தாங்கி நின்றதோடு சிவப்பு மஞ்சள் கறுப்பு நிற பலூன்களையும் தங்கள் கரங்களில் தாங்கி நின்றனர்.


தொடர்ந்து சுவிசில் பேசப்படும் யேர்மன் இத்தாலி பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் இளையோர் அமைப்பினரால் தாயகத்தில் எமது உறவுகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களை சுவிஸ் நாட்டவர்களிற்கு மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளைப் பேச்சாளர் அல்பேட் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனதுரையில் எந்தநிலைவரினும் எமது மக்கள் சோரம்போகமாட்டார்கள் என்பதற்கு இந்த ஒன்றுகூடல் சாட்சி பகர்வதாகத் தெரிவித்தார்.

திரண்டிருந்த மக்கள் தமது வலக்கரத்தை இடப்பக்க நெஞ்சில் வைத்து தமிழ் இளையோர் அமைப்பினரின் பிரகடனத்தை சர்வதேச சமூகத்தினருக்குத் தெரிவித்தனர். யேர்மன் மொழியிலும் பிரகடனம் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒலிபரப்பானதோடு தங்கள் கரங்களில் தாங்கி நின்ற சிவப்பு மஞ்சள் கறுப்பு நிற பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டனர். இவ் பலூன்களில் எமது தாயக மக்களின் அவலத்தை யேர்மன் மொழியில் எழுதிய அட்டையும் காணப்பட்டது.

பலூன் பறந்து சென்று வெடித்துச் சிதறும்வேளையில் எம் அவலங்களும் எம் மனத்துயர்களும் அதனை வாசிக்கின்ற ஒவ்வொரு சுவிஸ் நாட்டவரின் மனதிலும் உறையுமென சுவிஸ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் தனது மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். பாராளுமன்ற முன்றலில் கடுங்குளிருக்கும் மத்தியிலும் திரண்டிருந்த 7000துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள பயங்கரவாத அரசின் தமிழினப் படுகொலையை சுவிஸ் நாட்டினருக்கு எடுத்துரைத்திருந்தனர்.
__________
Tamilwin.com

No comments: