Thursday, 18 December 2008

** கிளிநொச்சி நகரைப் சூழ இருநாட்கள் நடந்த மோதலில் 165 படையினர் பலி, 375 பேர் காயம் - 39 படைச்சடலங்கள் இன்று ஒப்படைக்க ஏற்பாடு!

கிளிநொச்சி நகரைச் சூழவுள்ள பகுதிகளில் இரு நாட்கள் நடந்த மோதல்களில் 165ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 375ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்தனர்.நேற்று முன்தினம் ஐந்து முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்நகர்வு முயற்சிகள் விடுதலைப்புலிகளின் தீரமிகு எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டன.

நேற்று மாலை வரை இடம் பெற்ற இச் சமர்களில் படையினரின் 31 சடலங்களும், பெருமளவான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டன. நேற்று முன்தினம் அதிகாலை ஐந்து முனைகளிலிருந்து பெருமெடுப்பிலான முன்நகர்வு முயற்சிகளை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர் குண்டுவீச்சு விமானங்கள், எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பனவற்றின் தாக்குதல்கள், தொடர்ச்சியான பல்குழல் மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் கூடிய பெருமெடுப்பிலான இம் முன்நகர்வுகள் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இத்தாக்குதல்களுக்கெதிராக உக்கிரமான எதிர்ச்சமர்களை விடுதலைப்புலிகளின் படையணிகள் நடத்தின. புதுமுறிப்புப் பகுதியில் நேற்று காலைவரை எதிர்த்தாக்குதலை நிகழ்த்திய விடுதலைப்புலிகள் அங்கிருந்தும் படையினரை விரட்டியடித்தனர்.

நேற்று மாலைவரையான எதிர்த்தாக்குதல்களில் குஞ்சுப்பரந்தன், உருத்திரபுரம், அறிவியல்நகர் முறிகண்டி நகர்வுகள் முறியடிக்கப்பட்டு படையினர் பழையநிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
இவ் ஐந்து முனை நகர்வுகளின்போது 165 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும், 375ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்து முள்ளனர். குஞ்சுப்பரந்தனில் இருந்து உருத்திரபுரம் நோக்கி முன்னேறிய படையினர் மீதான தாக்குதல்களின் போது 18 சடலங்களும், புதுமுறிப்புத் தாக்குதலின்போது 13 சடலங்களுமாக மொத்தம் 31 சடலங்கள் விடுதலைப் புலிகளால் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பெருமளவான படைச்சடலங்கள் களமுனைகளில் சிதறிக்காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி கிளாலி களமுனைகளில் நேற்று முன்தினமும், நேற்றும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்காப் படையினரது 39 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் மூலம் தென்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

கிளாலிக் களமுனையில் எட்டுப் படைச்சடலங்களும், கிளிநொச்சிக் களமுனையில் 31 சடலங்களுமாக மொத்தம் 39 படைச்சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன.

அவை இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் மூலமாக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
__________
Sankathi.com

No comments: