Wednesday, 24 December 2008

** வலிந்த தாக்குதலைத் தொடங்குவதற்கு உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் - அரசியல்துறைப் பொறுப்பாளர்

ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

'றொய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டு சரணடைய வேண்டுமென்று கோரி வரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.

போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்காகும். எமது தற்காப்புத் தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலப்படுத்துவதும் ஆகும். பொருளாதாரம் நிர்மூலமாக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.

கிளிநொச்சி போர்க்களத்தில் படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உரிய நேரம், இடத்துக்காகக் காத்திருக்கிறோம். 2008ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.
_________
Sankathi.com

No comments: